
கேட்டல் (Hearing Senses)
Understanding Others Through Their Senses
(மற்றவர்களின் அறிவின் படி அவர்களைப் புரிதல்)
நாம் எல்லாவற்றையும் நமது 5 புலன்கள் வழியாகவே அனுபவிக்கிறோம் என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். நமக்கு 5 புலன்கள் இருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டை நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பமான புலனாக (Preferred sense(s)) தெரிந்தெடுத்துக் கொள்கிறோம் என்றும் பார்த்தோம்.
நாம் மற்றவர்களின் preferred sense ஐப் பற்றிப் புரியாத போது அந்த உறவுக்குள் விரிசல் வருகிறது என்றும் பார்த்தோம்.
அப்படி என்றால், என்னுடைய மற்றும் என்னுடன் இருப்பவர்களின் Preferred sense என்னவென்று எப்படிப் புரிவது, மற்றும், என்னுடைய preferred sense கேட்டல் (Hearing sense) ஆக இருந்தால், மற்றவர்களின் preferred sense என்னுடையதிலிருந்து வேறு பட்டால் அந்த உறவை எப்படி Handle பண்ணுவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
கேட்டல் என்னும் புலனைத் தன் விருப்பப் புலனாகக் கொண்டுள்ளவர்கள்:
- செவிப்புலன் குறித்த வார்த்தைகளை நிறைய பயன் படுத்துவார்கள்.
- நான் சொன்னது கேட்டதா?
- உன் குரல் மிகவும் இனிமை
- மறக்காமல் சொல்லிடு
- எனக்கு வாக்குவாதம் பிடிக்காது
- இதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை
- ஏதாவது கேக்குற மாதிரி பேசு
- சொல்வதை கவனமாகக் கேட்கிறாயா?
- ஆரவாரம் பலமா இருக்குது
- உன் அம்மாவின் குரல் போலவே கேட்கிறது உன் குரல்
- வெட்டிப்பேச்சு என்ன வேண்டிக் கிடக்கு
- இன்னும் ஒருதரம் சொல்லக்கூடாதா
- வர வரச் சத்தமாகப் பேசினால் பிடிக்கவில்லை
- கூச்சல் போடாதே
- இந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும்
- இந்தக் குரல் பால் தங்கையா குரல்தானே
- சவுண்டை குறை
- மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நன்றாக ஞாபகம் வைத்திருப்பர்கள். அதனால், யாராவது ஒருவர் வார்த்தையால் இவரைக் காயப்படுத்தியிருந்தால், அதை எளிதில் மறக்கவே மாட்டார்கள். என்னிடம் ஆலோசனைக்காக வந்த ஒருவரைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். தன் மனைவி “1995 ஏப்ரல் 15ம் நாள் இதுபோலக் கூறினாள்” என்று எல்லாமே தேதி வாரியாகச் சொன்னார்.
- Great Listeners. நாம் என்ன பேசினாலும், எவ்வளவு நேரம் பேசினாலும், கேட்டுக்கொண்டே இருப்பவர்கள். ஒன்றும் செய்வதற்கில்லையெனில், பாட்டுக்கேட்பது, அல்லது தன் மனதிற்குள் பாடுவது, பேசுவது (Self-Talk) தானாகவே இவர்களுக்குள் நடக்கும். மியூய்சிக் பிளேயர் இல்லாமலேயே மனசுக்குள் ஏதாவது ஒரு பாட்டைத் தட்டிவிட்டால், அது இசையுடன் சேர்ந்து முழுப்பாட்டும் கேட்கும்.
- இவர்களுக்குச் சபையில் போதகரைப் பார்க்க வேண்டுமென்பதில்லை, பேசுவது நன்றாகக் கேட்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்வார்கள். “எல்லோரும் ஆமென் சொல்லுங்க” என்றால் உற்சாகமாகச் சொல்பவர்களும் இவர்களே.
- மற்றவர்களின் பெயர்களை நன்கு ஞாபகம் வைத்திருப்பார்கள்.
- படிக்கும்போது சத்தமாகப் படிப்பது இவர்களுக்குப் பிடிக்கும். சில மாணவர்கள் கூட அப்படித்தானே? அவர்கள் படிப்பது அவர்களுக்கே கேட்டு, அதன் மூலம் புரிந்து கொள்வது.
- நிறையப்பேர் மொபைல் நம்பர்களை சரியாகச் சொல்வார்கள்.
கேட்டல் புலனை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு ஆலோசனை
- நீங்கள் (கேட்டல்). உங்கள் பிள்ளை (பார்த்தல்) புலனை அதிகம் பயன்படுதுபவன். நீங்கள் வீட்டுப் பாடம் கேட்கிறீர்கள். அவன் தப்பு தப்பாகச் சொல்கிறான்., அவனுக்குச் சொல்வதை விட எழுதினால் தான் தவறு இல்லாமல் எழுதுவான். ஏனெனில் எழுதும்போது பார்க்கிறான். அடி வெளுப்பதை விட்டு விட்டு இப்போது யோசியுங்கள்.
- நீங்கள் கேட்டல். உங்கள் கணவர் உணர்தல். ‘’நான் இவ்வளவு கஷ்டபட்டு சமைச்சு வச்சிருக்கேன், ஒரு வார்த்தை எப்படி இருக்குன்னு சொன்னீங்களா? இன்னிக்கு புது ஐட்டம் பண்ணினேன். அப்படியே பஞ்சத்திலிருந்து 10 நாள் சாப்பிடாத மாதிரி சாப்பிடுறீங்களே’’. அவர் உடனே,” அடியே.! சொல்றதுக்கு பதில் நிறைய சாப்பிட்டேன். பார்த்தியா? நான் செயலில் காட்டுகிறவன்.’’ இப்ப உங்க கோபம் சிரிப்பாய் மாறி இருக்குமே?
- நீங்கள் பேசுற டைப். பேசிக்கிட்டே இருந்தால் பிடிக்கும், அதற்காக உங்க வீட்டில் இருக்கிற எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமென்று எதிர் பார்க்காதீர்கள். ஒருவேளை உணர்தல் புலன் அதிகம் உபயோகிக்கும் கணவர் என்றால், அவர் கொஞ்சமாகத் தான் பேசுவார். அதற்காக அன்பே இல்லை என்று நினைத்து விட வேண்டாம்.
- நீங்கள் நன்றாகப் பேசும் உங்களைப் போல உள்ள நட்போ, உறவோ, அவர்களுடன்தொடர்பு வைத்துக் கொண்டு, நேரிலோ, தொலைபேசியிலோ, அடிக்கடி பேசி உங்களை நீங்கள் மகிழ்ச்சிப் படுத்திகொள்ளலாம்.
- பேசுகிற தொழிலை, வேலையைத் தேர்வு செய்து கொண்டால் உங்கள் ஆன்மா திருப்தியடையும். பொதுவாக இந்த மக்கள் டீச்சராகவோ, வக்கீல், பேச்சாளர், கவுன்சிலர், டி.வி. நிகழ்ச்சியில் Anchor ஆக வருபவர்கள், வியாபாரிகள் இதில் அடங்குவார்கள்.
நாம் நமது ஐம்புலன்களையும் கூர்மையாக வைத்துக் கொள்ளப் பயிற்சி எடுக்கக் கற்றுக்கொடுக்கும்போது, குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். உறவுகள் நன்றாக இருந்தால் வாழ்வில் எது வந்தாலும் சமாளிக்கலாம்.