
பார்த்தல்(Visual Senses)
Understanding Others Through Their Senses
(மற்றவர்களின் அறிவின் படி அவர்களைப் புரிதல்)
நாம் எல்லாவற்றையும் நமது 5 புலன்கள் வழியாகவே அனுபவிக்கிறோம் என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். நமக்கு 5 புலன்கள் இருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டை நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பமான புலனாக (Preferred sense(s)) தெரிந்தெடுத்துக் கொள்கிறோம் என்றும் பார்த்தோம்.
நாம் மற்றவர்களின் preferred sense ஐப் பற்றிப் புரியாத போது அந்த உறவுக்குள் விரிசல் வருகிறது என்றும் பார்த்தோம்.
அப்படி என்றால், என்னுடைய மற்றும் என்னுடன் இருப்பவர்களின் Preferred sense என்னவென்று எப்படிப் புரிவது? மற்றும், என்னுடைய preferred sense பார்த்தல் (Seeing or visual sense) ஆக இருந்தால், மற்றவர்களின் preferred sense என்னுடையதிலிருந்து வேறு பட்டால் அந்த உறவை எப்படி Handle பண்ணுவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
காண்பது (Seeing or Visual sense) என்னும் புலனைத் தனது விருப்பமான (Preferred sense) புலனாகக் கொண்டவர்கள்:
- கீழ்க்கண்ட அர்த்தம்தரும் வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.
- பார்த்தாயா
- கற்பனை செய்து பார்
- தெளிவாகச் சொல்
- கனவு கண்டேன்
- படம் வரைந்து காட்டு
- தொலைநோக்குப் பார்வை
- வெளிச்சமான வாழ்க்கை
- பெரிய கார் பிடிக்கும்
- மஞ்சள் கலர் சேலை
- வரிசையாக அடுக்கி
- ஒளிமயமான எதிர்காலம் உண்டு
- நன்றாகத் தேடு
- அன்று வெள்ளை கலர் ஆடை தான் அணிந்திருந்தார்
- அவர்கள் அனுபத்தைப் பெரும்பாலும் படங்களாகவே மனதில் பதியவைத்துக் கொள்வார்கள்.
யாரையும் ஒருமுறை பார்த்தலே போதும், அந்த முகத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது இவர்களுக்கு மிகவும் எளிமையான காரியம். - தான் இருக்கும் இடம் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு, எதுவாக இருந்தாலும் அதை ஒருமுறை நேரில் பார்த்தால் சுலபமாக இருக்கும். - முதல் வரிசையில் அமர ஆசைப்படும் விசுவாசிகள் இவர்களே! ஏனென்றால், போதகர் சொல்வதைப் பார்த்துக்கொண்டே கேட்டால்தான், பிரசங்கம் இவர்களுக்கு நன்றாகப் புரியும்.
- பேசும்போது கைகளை, இங்கும் அங்கும் ஆட்டிக்கொண்டும் பேசுவார்கள், தங்கள் மனதில் எல்லா அனுபவங்களும் படங்களாகப் பதிந்துள்ளதால், அதற்குள் புதைந்துள்ள விளக்கங்களை வார்த்தைகளாக வெளியே கொண்டு வந்து பேச வேண்டும் என்பதால் கொஞ்சம் வேகமாகவும், கொஞ்சம் உச்ச சுருதியிலும் இவர்கள் பேசுவார்கள்.
பார்த்தல் புலன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஆலோசனை
- உங்கள் கணவர் உணர்தல் (feeling) வேலையிலிருந்து வரும்போது நீங்கள்(பார்த்தல்) வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள், வந்ததும் கடலையை உரித்துத் தோலை கீழே போட்டு ரூமை குப்பையாக்குகிறார். அவர்(feeling) அவருக்கு இப்போதைக்கு வசதி டக்கென்று கீழே போடுவது… அவரைப் பொறுத்த வரை வீடு வசதிக்கு, எப்பவும் சுத்தமாக வைக்க அதென்ன மியூசியமா? என்று கேட்பவர். அவரைப் புரிந்து கொண்டால், இப்போது கோபம் வராது. கோபப்படாமல், சுத்தம் செய்யலாம். அவர் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுப்பதால் தான் உங்கள் அம்மா, அப்பா பணத்திற்காகக் கஷ்டப்படும்போது, அதை உணர்ந்ததால் மாதா மாதம் பணம் அனுப்புகிறார்.
- கணவர் கேட்டல். நீங்க(பார்த்தல்) வீட்டையே சுத்தம்பண்ணிக் கொண்டு இருப்பதை விட்டு விட்டு, ஆபிஸில் இருந்து வந்தால் சற்று நேரம் உட்கார்ந்து பேசுங்கள். அட! பாத்திரம் அப்புறம் கழுவிக்கொள்ளலாம். குழந்தைகள் பாடத்தில் சந்தேகம் கேட்டால், நான் சீரியல் பார்க்கணும் என்று எரிஞ்சு விழவேண்டாம்.
- உங்கள் கணவர் உணர்தல் (feeling) உங்கள் பிறந்த நாளுக்குக் காட்டன் சேலை வாங்கி வருகிறார். உங்களுக்கு appearance ரொம்ப முக்கியம். அவருக்கு வெயிலுக்கு காட்டன் நல்லதென்று வாங்கிவந்தால், வாங்கி சந்தோஷப்பட்டு விட்டு, பொறுமையாக “என்னங்க… இது என்னைக் குண்டாகக் காட்டும். எனக்கு ஒல்லியாகக் காட்டுற மாதிரி சிஃபான் புடவையே எப்போதும் வாங்கிக் கொடுங்களென்று சொன்னால், அடுத்த முறை புரிந்து கொள்ளலாம், அதை விட்டுட்டு,” இத்தனை வருஷமாகப் பாக்குறீங்க, இந்தப் புடவை தான் கட்டுறேனா? கண்ணை இவ்ளோ நாள் எங்கே வச்சீங்க?..ன்னு பாய்ந்து பர்த்த்டேவை காலி பண்ணிடாதீங்க.
- உங்கள் கணவர் உணர்தல்(feeling), ஆபிஸிலிருந்து வந்து “ஏய். ஒரே டல்லாக இருக்குது, பீச்சுக்கு போகலாம் என்றால்,” ஐயோ.! நான் சமைக்கணும், மாவு ஆட்டணும்” என்று அவரின் மூடை(mood) காலி பண்ணாமல் கிளம்பி போய்த்தான் பாருங்களேன்.
- வீட்டைச் சுத்தமாக வைப்பது, எதையும் நேர்த்தியாக அடுக்கி வைப்பது, கைவேலைபாடுகள், சமையல், அலங்காரம், இதெல்லாம் கடவுள் உங்களுக்குக் கொடுத்த திறமை. குப்பை மேட்டையே கோபுரமாக்கும் திறன். அது மற்றவர்களிடம் இல்லையே என்பதால் தேவன் கொடுத்த அதை வீட்டின் தேவைக்குப் பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளின் படிப்புக்குப் பயன்படுத்துங்கள். அதை விட்டு உங்களிடம் உள்ள அதே திறன் எல்லோருக்கும் கொண்டு வர நினைக்காதீர்கள்.
- இதுவே அளவுக்கு அதிகமானால், நீங்கள் மற்ற எல்லோரும் உங்களைப் போலவே மாறவேண்டுமென டார்ச்சர் செய்வீர்கள். உங்கள் குணத்தால் சுத்தமாக வைப்பதற்காக வீடே சண்டைக் காடாகிவிடும். இது வேண்டாமே.
இதிலிருந்து பார்த்தல் திறன் அதிகம் உள்ளோர், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்போது, முதலில் மற்றவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என உணரும்போது, கோபம் குறையும். பிறகு அன்பு என்றால் இவர்கள் அகராதியில் என்ன என்பதை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போது, பரஸ்பர அன்பு புது பரிணாமம் எடுக்கும். நீங்களும் மற்றவர்களுக்குத் தகுந்த மாதிரி அன்பை வெளிப் படுத்த ஆரம்பிப்பீர்கள்.
உதாரணம்
என்னிடம் ஆலோசனைக்காக வந்த, புதிதாகத் திருமணமான ஒரு குடும்பத்தில், கணவன் பார்த்தல் என்ற புலனை விரும்புகிறவராயும், மனைவி கேட்டல் என்ற புலனை விரும்புகிறவளாயும் இருந்தார்கள். தனது புதிய மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாட, ஊட்டிக்கு அழைத்துச் சென்று வந்து விட்டு, அந்தக் கணவர் தன் மனைவியை அசத்தி விட்டதாக நினைத்தார். மனைவிக்கோ, கேட்டல் புலன் பிடிக்குமென்பதால், அவளுக்கு இரண்டு நல்ல வார்த்தைகள் பேசினாலே மகிழ்ச்சி அடைவாள்.
அவர்களுக்குள் ஏதோ சிறு பிரச்சினை வந்தபோது, அவள் “என் பிறந்த நாளை இவ்வளவு மட்டமாக இதுவரை நான் கொண்டாடியது கிடையாது” என்றாள். உடனே கணவர் அதிர்ச்சியுடன், “உனக்காகக் கடன் வாங்கி, ஊட்டிக்கெல்லாம் கூட்டிச் சென்று செலவு செய்தேனே!” என்றார். அவளோ, “ஊட்டி, கொடைக்கானல் யாருக்கு வேண்டும்? ஒரு நாலு வார்த்தை ஆசையாய் பேசினீர்களா? அட்லீஸ்ட் ஒரு I Love You சொன்னீர்களா, இல்லை, அன்று நமது வீட்டுக்குப் பக்கத்திலேயே நடந்த ஆல்வின் தாமஸ் கக்சேரிக்கு அழைத்துக் கொண்டு சென்றீர்களா?” என்றாளாம். ஏனெனில் பேசுவது, ஐ லவ் யூ சொல்வது, பாட்டுக் கச்சேரி …இதெல்லாம், கேட்டல் புலன் அதிகமாகப் பயன்படுத்துபவர்களின் விருப்பம், மொழி எனலாம்.
இப்படித்தான் இரு மனங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் அதிகரித்து, கடைசியில் யார் யாருக்கு முன்போ சண்டையிட்டுக் கொள்கின்றனர். இந்த உதாரணத்தில், யார் மீது தவறு என்று புரிகிறதா?
என்ன செய்தால் மனைவி சந்தோஷப்படுவாள் என்று கணவனுக்குத் தெரிந்திருந்தால், இன்னும் குறைந்த செலவிலேயே அதிக சந்தோஷம் கொடுத்திருக்க முடியும். வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். அல்லது, கணவர், அவருக்குத் தெரிந்த விதத்தில், தன்னை சந்தோஷப்படுத்தவே இவ்வளவு முயற்சி எடுக்கிறார் என்று மனைவிக்குப் புரிந்திருக்க வேண்டும். இல்லை, “என்னை கச்சேரிக்கு கூட்டிட்டுப் போங்கன்னு” நேரடியாகச் சொல்லியிருக்கலாம். அப்போதும் வாழ்க்கை இன்பமாகவே இருந்திருக்கும் அல்லவா?
எனவே, நாம் நமது ஐம்புலன்களையும் கூர்மையாக வைத்துக் கொள்ளப் பயிற்சி எடுக்கக் கற்றுக்கொடுக்கும்போது, குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். உறவுகள் நன்றாக இருந்தால் வாழ்வில் எது வந்தாலும் சமாளிக்கலாம்.