
உணர்தல் (Feelings Senses)
Understanding Others Through Their Senses
(மற்றவர்களின் அறிவின் படி அவர்களைப் புரிதல்)
நாம் எல்லாவற்றையும் நமது 5 புலன்கள் வழியாகவே அனுபவிக்கிறோம் என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். நமக்கு 5 புலன்கள் இருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டை நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பமான புலனாக (Preferred sense(s)) தெரிந்தெடுத்துக் கொள்கிறோம் என்றும் பார்த்தோம்.
நாம் மற்றவர்களின் preferred sense ஐப் பற்றிப் புரியாத போது அந்த உறவுக்குள் விரிசல் வருகிறது என்றும் பார்த்தோம்.
அப்படி என்றால், என்னுடைய மற்றும் என்னுடன் இருப்பவர்களின் Preferred sense என்னவென்று எப்படிப் புரிவது, மற்றும், என்னுடைய preferred sense உணர்தல் (Feeling sense) ஆக இருந்தால், மற்றவர்களின் preferred sense என்னுடையதிலிருந்து வேறு பட்டால் அந்த உறவை எப்படி Handle பண்ணுவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
உணர்ச்சியைத் தன் விருப்பமான புலனாகக் கொண்டுள்ளவர்கள்:
- பிடிப்பு, உணர்வு, கடினமானது, மென்மை, ருசி, வாசம் போன்றவை தொடர்புடைய வார்த்தைகளை அதிகம் பேசுவார்கள். உணர்வுகள் தொடு உணர்வு மட்டுமன்றி, உள்ளுணர்வுகளையும் (சோகம், துக்கம், மகிழ்ச்சி, சமாதானம்) சேரும். உணர்வுகளின் கீழ் ருசித்தல் என்ற உணர்வும், முகர்தல் என்ற உணர்வும் சேரும். கீழ்க்கண்ட அர்த்தம் தரும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.
- ஏன் இப்படி டென்ஷன் ஆகுற?
- பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் வலி புரியும்
- எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறாயே எப்படி?
- உணர்ச்சி கெட்ட ஜென்மம்
- பதட்டப் படாதே
- மெதுவாக ஊற்று
- ஜில்லென்று தண்ணீர் கொடு
- தொட்டுப்பார் தெரியும்
- காரசாரமான விவாதம் கேட்டாயா?
- வர வர மன உளைச்சல் அதிகமாகிறது
- நல்ல திடமான பொருளாகக் கொடுங்க
- சேலை நைசாக இருக்கணும்
- கார் சீட்டு இன்னும் மெதுவாக இருக்கணும்
- அதன் விளைவு இனி தான் புரியும்
- ஏன் சுரசுரப்பாக இருக்கிறது?வாசமான பிச்சிப்பூ கிடைக்குமா?
- பார்ப்பதையும், கேட்பதையும் விட, எதையுமே செய்து பார்த்தால்தான் இவர்களுக்குப் புரியும்.
- அசையாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இவர்களால் அமர முடியாது. ஏனெனில் feelings மாறிகொண்டே இருக்க வேண்டும். ஸ்கூலில் சேஷ்டை செய்து, அடி வாங்குபவர்களும் இவர்களே.
- பிரசங்கம் இவர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமெனில், கைத்தட்டுதல், “பக்கத்திலிருப்பவரைப் பாருங்கள்”, “கைகளை உயர்த்தி எல்லோரும் அல்லேலூயா சொல்லுங்க” என்று ஏதாவது ஒரு முறையில் அவர்களின் உடலை அவ்வப்போது அசைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் கவனம் சிதறாமல் இருக்கும்.
- இவர்கள் பொதுவாக, மெதுவாக, நிறுத்தி நிதானமாகப் பேசுபவர்கள்.
இன்றைய உலகத்தில், நிறைய பேர் காதலித்துத் திருமணம் செய்து கொள்வது என்பது அதிகமாகி விட்டது. காதலிக்கும்போது இருக்கும் சந்தோஷம், திருமணம் செய்தவுடனே பலருடைய வாழ்விலும் குறைய ஆரம்பிக்கின்றது. இதுபோன்ற புரிதல்கள் குறைவதால், விவாகரத்துக்கள் கூட அதிகரித்து விட்டன. இதுபற்றிக் கொஞ்சம் ஆராயலாமா? இவர்களுக்கு நாம் எப்படி ஆலோசனை கொடுக்கலாம் என்பது பற்றியும் இங்குக் காணலாம்.
கருத்து வேறுபாடுகள் வருவதற்கு முக்கியமான காரணத்தைப் புரிந்துகொள்ளல் அவசியம். காதலனாகவும், காதலியாகவும் இருக்கும் வரை:
- அவர்கள் இருவரும் பார்க், பீச் என்று பிடித்த இடங்களுக்குச் சுற்றுவார்கள்தானே? அப்போது, கண்களுக்கு விருந்து கிடைத்து விடுகிறது. ஒரு புலன்மூலம் இருவருமே கவரப்பட்டு விடுகின்றனர்
- அப்போது இருவருக்குமே, குடும்பத்தில் பெரிதாக எந்தப் பொறுப்பும்(responsibility) இல்லாததால், அன்பாகவும், ஆசையாகவும், கொஞ்சுவதுமான உரையாடல் தான் இருக்கும். ஆதலால், காதுகளுக்குக் கேட்கும் விஷயமும் மகிழ்ச்சியானதாகவே இருப்பதால், கேட்கும் புலனும் திருப்தியாகி விடுகிறது.
- காதலிக்கும்போது, தொட்டுப் பேசுவது, வாசனை பொருட்கள் பயன் படுத்துவது, வித விதமான ஹோட்டல்களுக்குச் சென்று ருசி ருசியாகச் சாப்பிடுவது என்று மூன்றாவது முக்கிய உணர்வு புலனுடைய தேவையும் திருப்தியாக்கப் பட்டு விடுகிறது.
இவ்வாறாக, தெரிந்தோ, தெரியாமலோ, எல்லாப் புலன்களின் மூலமும் மகிழ்ச்சியான அனுவபம் கிடைத்து விடுவதால், காதலிக்கும்போது, பெரும்பாலும் சந்தோஷத்துடனேயே காலம் ஓடி விடுகிறது.
திருமணத்திற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா? வாழ்க்கை ஆரம்பிப்பதே அப்போதுதானே?
உதாரணம்:
இப்போது, இந்த இரண்டாவது உதாரணத்தில், கணவர் கேட்டல் என்ற புலனுக்கு முக்கியம் அளிப்பவர்; மனைவிக்கு முக்கியம் உணர்ச்சி. கணவர் தன் அன்பை வெளிப்படுத்த, பலமுறை I Love You என்று கூறும் வழக்கமுடையவர். அவர்களுக்குள் ஏதோ ஒருநாள் சிறு பிரச்சினை வந்துள்ளது. மனைவி, “உங்களுக்கு என்மீது அன்பே கிடையாது” என்றாள். கணவனோ, தூக்கி வாரிப் போட்டவனாக, “நான் தினமும் எத்தனை முறை I Love You கூறியுள்ளேன், மறந்து விட்டாயா?” என்றார். அவளோ, “I Love you என்று சொல்வது ஒரு பெரிய வேலையா என்ன? எங்கேயாவது கூட்டிட்டு போய்ச் சந்தோஷப்படுத்தியதுண்டா? … அது என்ன I Love you? வெறும் வாய் வார்த்தை… சரி, அதை விடுங்கள், ஒரு பத்து ரூபாய்க்கு ஜாதிப்பூ வாங்கிக் கொடுத்ததுண்டா?” பக்கத்து வீட்டு பத்மா தினம் 2 முழம் வைக்கிறாள். என்றாள். கூட்டிக் கொண்டு போவது, வாசனையான பூ மூலம் வருவது உணர்வு சம்பந்தப்பட்டது.
இதுபோல, எத்தனையோ உதாரணங்கள்…!
இப்போது புரிகிறதா? நாம் நமது ஐம்புலன்களையும் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொடுப்பது மூலமாக, நமது மனநல ஆலோசனையின் தன்மையே வேறு ஒரு நிலையில் இருக்கும். “வேற LEVEL” என்பார்களே, அது இது தானோ?
உணர்தல் புலன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஆலோசனை
- நீங்கள் உணர்தல். உங்கள் மனைவி பார்த்தல் புலன் என்றால், நீங்கள் ஒரு கார் வாங்கினால், கருப்பு நிறம் விரும்புகிறீர்கள், அவர்கள் வெள்ளை நிறம் தான் என்று சண்டை. கருப்பு என்றால், வாரம் ஒருமுறை துடைத்தால் போதும், உங்கள் வசதியை (வசதி ஒரு உணர்வு) உணர்ந்து சொல்கிறீர்கள். வெள்ளைநிற கார் என்றால் தினம் துடைக்கனுமே என்று கஷ்டப்படுகிறீர்கள்(உணர்வு), மனைவி வெள்ளைநிற கார் ராயலாக(பார்த்தல்) இருக்கும், பார்க்கப் பந்தாவாக இருக்கும் என்பது. ஒன்று நீங்கள் புரிய வைக்க வேண்டும், அல்லது கார் மனைவியைத் துடைக்க வைக்க வேண்டும், அல்லது கார் துடைக்க ஆள் வைக்க வேண்டும். பிரச்சனை விட்டது. மற்ற 2 க்கும் வழி இல்லாவிடில் உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டு சரியென்று கருப்பு காருக்கே ஓகே சொல்வார்கள்.
- நீங்கள் உணர்தல். உங்கள் மகன் கேட்டல் புலன். உங்களுக்கு உடம்பு சரியில்லை. அவன் கண்டுகொள்ளவே இல்லை. உங்களுக்கு மனசு வலிக்கிறது. ஒரு ஆஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று தோன்றவில்லை. உள்ளேயே குமுறுகிறீர்கள். உங்கள் உணர்வு அவனுக்கு புரியவில்லை. எப்படியெல்லாம் வளர்த்தோம்? அன்பே இல்லையே? மகனைக் கூப்பிட்டு அம்மா வேறு இரண்டு திட்டு திட்டுகிறாள். அவன் பதிலுக்கு, ஏன் இவ்வளவு திட்டுகிறீர்கள்? “ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போப்பான்னு சிம்பிளாகச் சொல்ல வேண்டியது தானே?” ன்னு முடித்துக் கொண்டான். அவனுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். ஏனெனில் பார்த்தோ, உணர்ந்தோ அவனுக்கு நடக்கத் தெரியாது. அதே நேரம் உங்களுக்கு நீங்களே மற்றவர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது…” என் பையன் என்ன சொன்னாலும் கேட்பான்.” ஆக நீங்க சொல்லவேண்டும் என்பதுதான் தீர்வு.
நாம் நமது ஐம்புலன்களையும் கூர்மையாக வைத்துக் கொள்ளப் பயிற்சி எடுக்கக் கற்றுக்கொடுக்கும்போது, குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். உறவுகள் நன்றாக இருந்தால் வாழ்வில் எது வந்தாலும் சமாளிக்கலாம்.